தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தர கோரி பள்ளி மாணவி ஒருவர் ஸ்லேட்டில் எழுதி கேட்டதாக பரவும் புகைப்படம், ஸ்டாக் என்ற புகைப்படங்களை விற்கும் தளத்தில் இருந்து எடுத்து எடிட் செய்யப்பட்டது என்று பூம் கண்டறிந்துள்ளது.
இந்த புகைப்படம், “திராவிடமாடல் அரசே…அரசு பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு! அல்லது இந்தியை கற்று கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!!!” என்ற கருத்துடன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படம் பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய, கூகுள் லென்ஸ் பயன்படுத்தி, ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம்.
இந்த தேடுதல், அடோபி ஸ்டாக் (Adobe Stock) என்ற இணையதளத்தில், “Happy smiling schoolgirl kid holding empty slate board near paddy field - concept of education, learning and childhood empowerment” என்ற தலைப்பில், அந்த மாணவி இருக்கும் புகைப்படத்துக்கு கொண்டுச் சென்றது.
அடோபி ஸ்டாக் என்பது புகைப்படங்களுக்கான ஒரு தளம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த சிறுமி வைத்திருக்கும் பலகையில் எதுவும் எழுதப்படவில்லை. இந்த புகைப்படத்தை பயன்படுத்தி, இந்தி கற்றுத்தர கோரும் வாசகத்தை எடிட் செய்து சேர்க்கப்பட்டுள்ளது என்று பூம் கண்டறிந்துள்ளது.
இதே புகைப்படம், Alamy, Shutterstock போன்ற மற்ற புகைப்படங்களுக்கான தளங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.