பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி, தனது தாக்குதல் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சி என ஒரு பழைய புகைப்படத்தை செய்தியாக பிரபல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த தவறான செய்தி, நியூஸ் தமிழ் 24x7, தினமலர், ஒன்இந்தியா தமிழ் ஆகிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் பிரத்யேக ’முதல் படம்’ என்று கூறி ஊடக செய்தி அறிக்கைகளில் பழைய புகைப்படத்தை வெளியிட்டது.
இந்த புகைப்படத்தை பூம் சரிபார்த்த்து. அப்போது, இது 2021ஆம் ஆண்டு அக்டோபர் முதல் ஃபேஸ்புக்கில் இருக்கும் ஒரு வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் என்பதைக் கண்டறிந்தது. மேலும், குறிப்பிடப்பட்ட எந்த ஊடக அறிக்கைகளிலும், சமீபத்திய பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதியின் புகைப்படத்தைக் காட்டுகிறது என்பதை அரசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.
இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றான ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்களும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரும், அடையாளம் மற்றும் பெயர்களைக் கேட்ட பிறகு, பயங்கரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை குறிவைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கம் தீவிர அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், நியூஸ் தமிழ் 24x7 செய்தியின் யூடியூப் சேனலில், பஹல்தாம் தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதியின் முதல் புகைப்படம் வெளியானது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், ஊதா நிற குர்தா மற்றும் பைஜாமா அணிந்த ஒரு நபர் துப்பாக்கியுடன் இருக்கிறார். இது சம்பவ இடத்தில் ஓடும்போது கேமராவில் பதிவாகியிருப்பது போன்று தோன்றுகிறது.
உண்மை சரிபார்ப்பு
இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று நடந்த தாக்குதலுக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பேஸ்புக்கில் இருக்கும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி இது என்று பூம் கண்டறிந்துள்ளது.
இந்த காணொளியில் உள்ள காட்சிகளை கீஃபிரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். மேலும், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு பதிவு அதே வைரல் புகைப்படத்தை வேறு கோணத்தைக் காட்டியது.
இந்தப் பதிவு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், அதே நபரை வேறு கோணத்தில் காட்டியது. அவரது துப்பாக்கி தெளிவான கோணத்தில் தெரிந்தது. இதன் அர்த்தம், அந்தப் புகைப்படம் ஒரு நீண்ட வீடியோவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதாகும்.
இந்த தகவலைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சில முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தேடல்களை மேற்கொண்டோம். அப்போது, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் இரண்டு புகைப்படங்களையும் கண்டறிந்தோம்.
பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த காணொளியை பாகிஸ்தானிய கணக்கு ஒன்று பதிவேற்றியுள்ளது. அதில் அந்த நபரின் இருப்பிடம் அல்லது அடையாளம் குறித்த எந்த விவரங்களும் தலைப்பில் இல்லை.
40 வினாடிகள் கொண்ட இந்த காட்சியில், அந்த நபர் தனது துப்பாக்கிக் கொண்டு போர்/ஆயுதப் பயிற்சியில் காணப்படும் அசைவுகளைப் பின்பற்றுகிறார். அந்த நபரிடமிருந்து சிறிது தூரத்தில் நின்று அவரது பயிற்சியைப் பார்க்கும் மற்றொரு நபரையும் காணொளியில் தெரிகிறார்.
செய்தி சேனல்கள் ஒளிபரப்பிய புகைப்படத்திற்கும் ஃபேஸ்புக்கில் கிடைக்கும் காணொளிக்கும் இடையிலான ஒப்பீடு கீழே காட்டப்பட்டுள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் தங்கள் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகளில், ஊடக செய்தி அறிக்கைகள் பயன்படுத்திய புகைப்படத்தில் உள்ள நபரைப் போலல்லாமல், தாக்குதல் நடத்தியவர்கள் உருமறைப்பு உடையில் இருந்ததாக கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் சில சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை விலகிச் செல்லக் கூறி, பின்னர் அவர்களை மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி, அவர்களை நோக்கிச் சுடுவதற்கு முன்பு தங்கள் அடையாளத்தை நிரூபிக்கச் சொன்னதால், அந்த இடம் குழப்பமாக இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் விவரித்ததாக மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளியில், அந்த நபர் தனது துப்பாக்கியை காற்றை நோக்கி நீட்டிக் காட்டுவது போலவும், யாரையும் தாக்கவோ அல்லது தனது துப்பாக்கியால் சுடவோ இல்லை என்றும் தெரிகிறது. இந்த காணொளியில் பின்னணியில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. மேலும் பஹல்காம் சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் நேர்காணல்களில் விவரித்தபடி, தாக்குதலின் காட்சிகளுடன் இது பொருந்தவில்லை.
அந்த நபரின் இருப்பிடம் அல்லது அடையாளத்தை சுயாதீனமாக எங்களால் சரிபார்க்க முடியவில்லை. ஆனால் ஊடகங்கள் தாக்குதல் நடத்தியவரின் படம் என்று செய்தி வெளியிட்ட படம் பழையது என்றும் சமீபத்திய பஹல்காம் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என்றும் உறுதிப்படுத்த முடிந்தது.