மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் சம்பவத்தின் காணொளி ஒன்று நாக்பூரில் நடந்ததாக பரவும் பதிவுகளில் உண்மை இல்லை என்று பூம் கண்டறிந்துள்ளது.
சுமார் 45 நொடிகள் நீளும் இந்த காணொளியில், இஸ்லாமியர்கள் இருவர் மீது காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் இந்த காணொளியை பகிர்ந்த ஒரு பயனர், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.”, என்ற தகவலுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ராவில் அவுரங்சீப் கல்லறையை அகற்ற கோரி இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அங்கு வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில், நாக்பூரில் இந்த காணொளி எடுக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, காணொளியின் சில பிரேம்களை எடுத்து, நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம்.
இந்த தேடுதல், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் எக்ஸ் கணக்கிற்கு கொண்டு சென்றது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று பகிர்ந்துள்ள அவரது பதிவில், ”காவல்துறையினர் இந்த இளைஞர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம், இந்த காணொளி நாக்பூரில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை பூம் உறுதிச்செய்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் நடந்த கலவரம் குறித்து நாங்கள் கூகுளில் தேடினோம். அப்போது, இந்தியா டூடே இணையதளத்தில் இந்த கலவரம் குறித்து செய்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், பிராசந்த் பூஷண் பகிர்ந்த செய்தி காணொளியில்,’Maktoob Media’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய பிரதேச வன்முறை, Maktoob media போன்ற குறிப்பிட்ட சில வார்த்தைகள் கொண்டு நாங்கள் கூகுளில் தேடியபோது, அதே காணொளி கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று இந்த ஊடகத்தின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.