பஹல்காம் தாக்குதல்: கடற்படை அதிகாரியின் இறுதிக் காட்சி என்ற தவறான கூற்றுடன் பரவும் காணொளி
வைரல் காணொளியில் நடனமாடும் தம்பதியினர், தாக்குதலுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு பஹல்காமில் இருந்த சமூக வலைதள பிரபலங்களான ஆஷிஷ் செஹ்ராவத்தும் அவரது மனைவியும்.



ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலையும் அவரது மனைவியையும், அந்தப் பகுதிக்குச் சென்ற ஒரு தம்பதியினரின் தொடர்பில்லாத மற்றொரு காணொளியுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. இது சமூக ஊடக பயனர்களால் பரவலாகப் பகிரப்பட்டது மட்டுமல்லாமல், பல செய்தி நிறுவனங்கள் தவறான கூற்றுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
வைரலான காணொளியுடன் இருப்பது சமூக ஊடக பிரபலங்கள்ஆஷிஷ் செஹ்ராவத் மற்றும் அவரது மனைவி யாஷிகா சர்மா என்பதை பூம் கண்டறிந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று, காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் இந்து ஆண் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கொலைகளைச் செய்ததாகவும், கொலைகளைச் செய்வதற்கு முன்பு பெயர்கள் மற்றும் அடையாளங்களைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால். அவர் தனது மனைவி ஹிமான்ஷியுடன் பஹல்காமிற்குச் சென்று கொண்டிருந்தார். இந்த தம்பதியினர் இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். துயரமான தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகள் தனது கணவரை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ஹிமான்ஷி விவரிக்கும் காணொளி வைரலானது. இருப்பினும், பள்ளத்தாக்கில் ஒரு தம்பதியினர் நடனமாடுவதைக் காட்டும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவை வினய் மற்றும் ஹிமான்ஷியின் என்ற பொய்யான கூற்றுடன் பகிரப்பட்டன.
எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், “இது சினிமா அல்ல நிஜம்..நேற்று பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வாலும் அவருடைய மனைவிஹிமான்ஷியும் தேனிலவை கொண்டாடிய வீடியோ..இது தான் அவர்களின் கடைசி வீடியோ.” என்று பகிர்ந்துள்ளார்.
வைரலான காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை என்று டைம்ஸ் நவ், ஃப்ரீ பிரஸ் ஜர்னல் மற்றும் மின்ட் ஆகியவை கூறியிருந்தாலும், நடனமாடும் தம்பதியினரைக் காட்டும் காணொளியின் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டு, அதை நர்வால் மற்றும் அவரது மனைவியுடன் தவறான கூற்றுடன் வெளியிட்டனர்.
உண்மை சரிபார்ப்பு
இந்த வைரல் காணொளியின் சில பிரேம்களை நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அப்போது, இதில் காணப்படும் தம்பதியினர் ஆஷிஷ் செஹ்ராவத் மற்றும் அவரது மனைவி யாஷிகா சர்மா என அடையாளம் கண்டோம். இதனைத் தொடர்ந்து ஆஷிஷை பூம் தொடர்பு கொண்டது. அவர் இந்த காணொளி இந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்திய ரயில்வேயில் தற்போது பணிபுரியும் ஆஷிஷ் எங்களிடம் இதுகுறித்து கூறுகையில், “இந்த காணொளியை ஏப்ரல் 14 தேதியன்று பஹல்காமில் படம் பிடித்தோம். தாக்குதலுக்குப் பிறகு, நண்பர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. அதன் பிறகு நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்; திரும்பி வந்துவிட்டோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க இந்த காணொளியைப் பதிவிட்டோம். ஆனால், காணொளிக்கு வெறுப்பு உணர்வைத் தூண்டும் விதமாக கருத்துகள் வந்ததால், அதை நீக்க முடிவு செய்தோம்.”
தவறான கூற்றுடன் தங்கள் காணொளியை தகவலைப் பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தான் ஆலோசிப்பதாக ஆஷிஷ் எங்களிடம் தெரிவித்தார்.